வளமை உணர்வை உருவாக்குதல்

பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான பரம்பரைச் செல்வத்திலிருந்து சில தேர்வுகள்

ஸெல்ஃப்-ரியலைசேஷன் சஞ்சிகையின் 2009 வசந்தகால இதழிலிலிருந்து ஒரு கட்டுரையின் பகுதிகள், “வளமை உணர்வுநிலையை உருவாக்குதல்:
நல்ல நேரங்களிலும் மோசமான காலத்திலும் உங்கள் தேவைகளை வழங்குவதற்காக அமோக விதிமுறையைச் செயல்படுத்துவதற்கான ஒன்பது ஆன்மீக கோட்பாடுகள்.”

உலகத்திற்கான இறைவனின் திட்டம் வளமையும் ஆனந்தமும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பருப்பொருள் சார்ந்த, அத்துடன் ஆன்மீகம் சார்ந்த அமோகமானது, ரிதம், பிரபஞ்ச விதி அல்லது இயற்கையான அறநெறிப் பண்பு என்கிற கட்டமைப்பு சார்ந்த வெளிப்பாடு ஆகும்….

மெய்ப்பொருளின் ஆழத்தை ஊடுருவியிருக்கும் முனிவர்கள் அனைவரும் கூறுவது: உலக முழுவதிற்கும் ஒரு தெய்வீகத் திட்டம் இருக்கிறது; அது மிக அழகானது, ஆனந்தமயமானது.”

இறைவனின் மற்றும் கிறிஸ்தவ சகோதரத்துவ விதியின்படி, இந்த பூமி அனைத்து மனிதகுலத்திற்கும் வாழ்விடத்தை மற்றும் தேவைப்படுவதை அளிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது; சுரங்க வளத்தையும் பிற ஆதாரங்களையும் சமமாக உழைப்போர்க்கு சமமாக விநியோகிக்கப்பட வேண்டியிருந்தது. மேலும் இறைவன் தெய்வீகப் பிறப்புரிமை விதியை நிறுவினார்: அனைத்து ஆண்களும் பெண்களும் அவருடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளனர், எனவே அடிப்படையில் தெய்வீகமானவர்கள்; மேலும் அனைத்து நாடுகளும் ஒரே இனத்தவர், பொதுவான பெற்றோர்களான ஆதாம் மற்றும் ஏவாளின் வழித்தோன்றல்கள்.

இந்த அடிப்படை உறவை நீங்கள் நம்பினால், புறத்தே வேறுபட்ட தேசிய இனங்களுக்கிடையில் எந்த உள் வித்தியாசத்தையும் அங்கீகரிக்காதவாறு, உங்கள் சொந்த குடும்பத்தைப் போலவே உலகின் அனைத்துக் குடிகள் மீதும் நீங்கள் அன்பை உணர்ந்தால், நீங்கள் பூமியின் வளத்திற்கான உங்கள் பங்கிற்கு ஒரு முறைப்படியான சூட்சும உரிமையை நிலைநாட்டுகிறீர்கள்.

தங்களுக்கு மட்டும் வளமையை நாடுபவர்கள், இறுதியில் கட்டாயமாக வறியவராகவோ அல்லது மன இசைவின்மையால் பாதிக்கப்பட்டவராகவோ ஆகிவிடுவர்; ஆனால், உலகம் முழுவதையும் தங்கள் வீடாகக் கருதி, ஒரு கூட்டத்திற்காக அல்லது உலக வளமைக்காக உண்மையாகவே அக்கறையுடன் உழைப்பவர்கள், சூட்சும சக்திகளை செயல்படுத்துகிறார்கள், அவை இறுதியில் முறைப்படி அவர்களுக்கே உரிய தனிநபர் செழிப்பைக் காணக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது ஒரு உறுதியான மற்றும் இரகசிய நியதி.

ஒருவர் வளமையடைவது ஒருவரின் படைப்புத் திறனை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக அவரது கடந்த காலச் செயல்களையும், காரண-காரியம் என்ற சூட்சும விதியை செயல்படுத்துவதற்கான அவரது தற்போதைய முயற்சிகளையும் சார்ந்துள்ளது. மனிதகுலம் ஒட்டுமொத்தமாக சுயநலமின்றி நடந்து கொண்டால், அந்த விதியின் ஆற்றல் விதிவிலக்கன்றி அனைவருக்கும் சமமாக செழிப்பை வினியோகிக்கும். சக்திவாய்ந்த நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களால் ஆக்கப்பூர்வமான செழிப்பை உருவாக்க இந்த சூட்சும சக்தியை தூண்டுகிறவர்கள் செல்வச் செழிப்பில் இருக்கிறார்களோ அல்லது வறுமையில்-வாடும் சூழலில் இருக்கிறார்களோ, அவர்கள் எங்கு சென்றாலும் வெற்றி பெறுகிறார்கள்.

வளமையை உருவாக்கக் காரண காரிய விதியை பயன்படுத்தவும்

இந்த வாழ்வை மட்டுமல்ல, கடந்த கால வாழ்வையும் நிர்வகிக்கும் காரண-காரிய விதியின்படி அனைத்துச் செழிப்பும் மனிதனுக்கு அளவிடப்பட்டு வழங்கப்படுகிறது. அதனால்தான் அறிவுத்திறன் வாய்ந்த மக்கள் ஏழையாகவோ அல்லது ஆரோக்கியமற்றவராகவோ பிறக்கலாம், மனதளவில் சராசரியான ஒரு நபர் ஆரோக்கியமாகவும் செல்வந்தராகவும் பிறக்கலாம். மனிதர்கள் அனைவரும் முதலில் சுதந்திரமான தேர்வு மற்றும் சாதனைக்கான ஆற்றலைச் சமமாக கொண்டவர்களாக இறைவனின் பிரதிபிம்பத்தில் செய்யப்பட்ட அவனுடைய புதல்வர்களாக இருந்தனர். ஆனால் இறைவன்-அளித்த பகுத்தறிவையும் இச்சா சக்தியையும் தவறாகப் பயன்படுத்தியதனால், மனிதன் காரண-காரியம் (கர்ம வினை) என்ற இயற்கை விதியின் கட்டுப்பாட்டின் கீழ் வீழ்ந்துவிட்டான், மற்றும் அதன் மூலம் வாழ்வின் வெற்றியை அடைவதற்கான சுதந்திரத்தை வரையறைப்படுத்தியிருக்கிறான். ஒரு மனிதனின் வெற்றி அவனது அறிவுத்திறன் மற்றும் செயல்திறனை மட்டுமல்ல, அவனது கடந்த காலச் செயல்களின் தன்மையையும் சார்ந்துள்ளது. இருப்பினும், கடந்த காலச் செயல்களின் சாதகமற்ற முடிவுகளைச் சமாளிக்க ஒரு வழி உள்ளது. தோல்விக்கான காரணங்கள் அழிக்கப்பட வேண்டும் மற்றும் வெற்றிக்கான ஒரு புதிய காரணம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

வெற்றி மற்றும் வளமைக்கான உயர்-உணர்வுநிலை ஆதாரத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்
உணர்வுப்பூர்வ மனத்தால் மட்டுமே ஆக்கப்பூர்வமான வெற்றியைத் தரும் ஒரு புதிய காரணத்தை எந்த ஒரு வழியிலும் தொடங்க முடியாது; ஆனால் மனித மனம் இறைவனுடன் தன்னை இசைவித்துக் கொள்ளும் போது, உயர்-உணர்வு நிலையில், அது நிச்சயம் வெற்றி பெறும்; ஏனென்றால், உயர்-உணர்வுநிலை மனம் இறைவனின் எல்லையற்ற சக்தியுடன் இசைந்து இருக்கிறது, எனவே அதனால் வெற்றியின் புதிய காரணத்தை உருவாக்க முடியும்.

முழுமையான வெற்றி என்பது “உங்கள் வரம்பற்ற உயர்-உணர்வுநிலை ஆற்றலை வளர்ப்பதன் மூலம் உங்களுக்குத் தேவையானதை, விருப்பப்படி உருவாக்கும் சக்தியை” குறிக்கிறது. இந்தியாவின் ஆன்ம அனுபூதி அடைந்த மகான்கள் கற்பித்தபடி, தியானத்தின் திட்டவட்டமான உத்தியை அறிந்து கொள்வதன் மூலம் இந்த, உயர்-உணர்வுநிலைச் சக்தியை எழுப்ப முடியும். செழிப்பு, ஆரோக்கியம், வெற்றி, ஞானம் மற்றும் இறைத் தொடர்பை எந்த நேரத்திலும், விருப்பப்படி, மற்றும் வரம்பின்றி உருவாக்கும் பொருட்டு, மனத் தொழிற்கூடத்தின் மன இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கலையில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது.

மேற்கத்திய சகோதர சகோதரிகள், மனம் அதன் கண்டுபிடிப்புகளை விட பெரியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானப்பூர்வமாக பன்முக வெற்றியை அடைய மனத்தைக் கட்டுப்படுத்தும் கலைக்கு அதிக நேரம் அளிக்கப்பட வேண்டும். எல்லாம்-நிறைவேற்றும், எல்லாம்-வல்ல மனத்தை மேம்படுத்துவதைப் புறக்கணித்தவாறு, மனத்தில் உற்பத்தியாகும் விஷயங்களுக்குக் குறைவான நேரமே கொடுக்கப்பட வேண்டும்….

தியானத்தின் மூலம், ஆரோக்கியமும் அமைதியும் இல்லாத செல்வம் வெற்றி அல்ல என்பதையும், தேவைகளுக்கான செல்வம் இல்லாத அமைதியும் ஆரோக்கியமும் முழுமையான அல்லது வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்காது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். இந்தியா கற்பித்த வழியைப் பின்பற்றுங்கள்: உயர்-உணர்வுநிலை மற்றும் மனத்தின் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுங்கள்; பின்னர் உங்களுக்குத் தேவையானதை உங்கள் விருப்பப்படி நீங்கள் உருவாக்கலாம்.

சங்கல்ப சக்தியை வெளிப்படுத்தும் பயிற்சி செய்யவும்
அனைத்து ஆன்மீக மற்றும் பருப்பொருள் கொடைகளும் [இறைவனின்] எல்லையற்ற அமோகத்திலிருந்து பாய்கின்றன. அவருடைய கொடைகளைப் பெற நீங்கள் வரம்பு மற்றும் வறுமை பற்றிய அனைத்து எண்ணங்களையும் உங்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். உலகளாவிய மனம் பூரணமானது மற்றும் எந்தப் பற்றாக்குறையும் அற்றது; அந்தத் தோல்வியுறா வழங்கலை அடைய நீங்கள் அமோகத்தின் ஓர் உணர்வுநிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ரூபாய் எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியாவிடினும், நீங்கள் கவலையை ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டும். நீங்கள் உங்கள் பங்கைச் செய்து, இறைவன் தன் பங்கை ஆற்ற அவரை நம்பியிருந்தால், பூடகமான சக்திகள் உங்கள் உதவிக்கு வருவதையும், உங்கள் ஆக்கப்பூர்வமான விருப்பங்கள் விரைவில் நிறைவேறுவதையும் நீங்கள் காண்பீர்கள். இந்த நம்பிக்கையும், அமோக உணர்வும் தியானத்தின் மூலம் அடையப்படுகிறது.

சங்கல்பம்: “இறைவனே எனக்குரிய வற்றாத தெய்வீக வங்கி. நான் எப்போதுமே செல்வந்தன், ஏனென்றால் என்னிடம் பேரண்டக் களஞ்சியத்தின் திறவுகோல் உள்ளது. எனக்குத் தேவைப்படும் நேரத்தில் எனக்குத் தேவையானதை கொணர சர்வ-வியாபகப் பெரும் நன்மையின் சக்தியில் பூரண விசுவாசத்துடன் நான் முன்னேறிச் செல்வேன்.”

இதைப் பகிர

Facebook
X
WhatsApp