பகவத் கீதையின் ஞானம் என்ற எங்களின் ஊக்கமளிக்கும் உரைத் தொடரில், தொடர்ந்து தமிழில் வரும் உரையில் பங்குபெற உங்களை வரவேற்கிறோம். இவ்வுரைகள் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அவர்கள் God Talks With Arjuna – வில் அருளிய பகவத் கீதை விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டது. அந்த மாபெரும் குருவின் தெய்வீக ஊக்கமளிக்கும் மொழிபெயர்ப்பும், விரிவான விளக்கவுரையும் இந்த அன்புக்குரிய சாத்திர நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வுரையை YSS-ன் மூத்த சன்னியாசி ஸ்வாமி சுத்தானந்த கிரி அவர்கள் வழங்குவார்.
இவ்வுரையில், ஸ்வாமி சுத்தானந்தா அத்தியாயம் ஒன்றிலிருந்து சுலோகங்கள் 4, 5 மற்றும் 6-ஐ விளக்குகிறார். இவை மூளை- முதுகுத்தண்டு மையங்களில் உள்ள ஆன்மிகப் போர்வீரர்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன—பக்தி, ஆன்மீக நினைவாற்றல், பகுத்தறியும் புத்தி, பிராணாயாமம் மற்றும் பிற, ஒரு சாதகரின் அகப்போரான குருக்ஷேத்திரத்தில் அவருக்குத் துணைபுரிகின்றன. இப்பரதத்துவப் போர்வீரர்களைப் பற்றி பரமஹம்ஸ யோகானந்தர் கூறுகிறார்: “இவர்கள் யோகப் பயிற்சியின் மூலம் சாதகரிடம் தோன்றும் ஆன்மீக விளைவுகளாவர். இவர்கள், ஐந்து முக்கியப் பாண்டவர்களுடன் சேர்ந்து யோகிக்கு துணையாக வந்து, புலன் மனத்தின் தீய வீரர்களுடனான போரில் அவருக்கு உதவுகின்றனர்.”
இந்த உரை YSS சென்னை கேந்திராவில் பதிவு செய்யப்பட்டது. இதனை செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை, இரவு 10.00 மணி (IST) வரைக் காணலாம்.
பகவத் கீதை குறித்த பிற உரைகள்
ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கிய, பல பாகங்களாக அமைந்த மற்றொரு சொற்பொழிவுத் தொடரைக் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சாத்திர விளக்க உரை பற்றி
ஆன்மீக உன்னதமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியரான பரமஹம்ஸ யோகானந்தர், பகவத் கீதைக்குத் தெய்வீக உள்நோக்குத் திறனுடன் விளக்கம் அளிக்கிறார். அவரது விளக்கவுரையில், அன்றாட எண்ணங்கள் மற்றும் செயல்களின் நுட்பமான காரணங்கள் முதல் பிரபஞ்ச ஒழுங்கின் பேரமைப்பு வரை அதன் உளவியல், ஆன்மீகம் மற்றும் பரதத்துவ ஆழங்களை ஆராய்வதன் மூலம், பரமஹம்ஸர் ஆன்மாவின் முக்தியை நோக்கிய பயணத்தின் விரிவான சித்தரிப்பை வழங்குகிறார்.
கீதை கூறும் தியானம் மற்றும் சரியான செயல்பாட்டின் சமநிலைப் பாதையை தெளிவாக கோடிட்டுக் காட்டும் பரமஹம்ஸர், ஆன்மீக நேர்மை, அமைதி, எளிமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை எவ்வாறு நமக்காக உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறார். நம் விழிப்படைந்த உள்ளுணர்வின் மூலம், வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்க வேண்டிய சரியான போக்கை அறிந்துகொள்கிறோம்; இதனால் எந்தக் குறைபாடுகள் நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன, எந்த நேர்மறை குணங்கள் நம்மை முன்னேறச் செய்கின்றன என்பதைத் தீர்மானிக்கவும், வழியில் உள்ள இடர்களை அடையாளம் கண்டு தவிர்க்கவும் முடிகிறது.





















