உண்மையான வெற்றியையும் செல்வ வளத்தையும் அடைதல்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துக்களில் இருந்து சில பகுதிகள்

உண்மையான வெற்றி

வெற்றி ஓர் எளிதான விஷயம் அல்ல; அது உங்களிடம் உள்ள செல்வத்தின் மற்றும் பொருள்சார்ந்த உடைமைகளின் அளவால் மட்டுமே தீர்மானக்கப்பட முடியாது. வெற்றியின் பொருள் மிகவும் ஆழ்ந்து செல்கிறது. அது உங்களுடைய அக அமைதியும் மனக் கட்டுப்பாடும் உங்களை எல்லாச் சூழ்நிலைகளிலும் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறதோ, அந்த அளவினால் மட்டுமே அளக்கப்பட முடியும். அதுவே மெய்யான வெற்றி.
வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றின் இரகசியம் உங்கள் அகத்தே உள்ளது. நீங்கள் வெற்றியையும் வளத்தையும் அகத்தே இல்லாமல் புறத்தே கண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாக வெற்றியடையவில்லை. மகிழ்ச்சியற்ற ஒரு கோடீஸ்வரன் வெற்றிபெறவில்லை. உங்களிடம் ஒரு பத்து லட்சம் டாலர்கள் இருந்தால் நீங்கள் வெற்றியாளராக இருக்க முடியாது என்ற பொருளில் நான் கூறவில்லை. நீங்கள் ஏழையோ அல்லது செல்வந்தரோ, நீங்கள் வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு மெய்யான வெற்றியாளர்.

ஆற்றல்மிக்க இச்சாசக்தியைப் பயன்படுத்துதல்

முடியாதது என்று எதுவுமில்லை, நீங்கள் அவ்வறு எண்ணினாலன்றி.

Kailash mountainஒரு நிலையற்ற இருப்பாக நீங்கள் வரையறைக்குட்பட்டவர்கள், ஆனால் இறைவனின் குழந்தையாக நீங்கள் வரம்பற்றவர்கள்….உங்கள் கவனத்தை இறைவன் மீது குவியுங்கள், மற்றும் எந்தத் திசையிலும் பயன்படுத்த நீங்கள் விரும்பும் சக்தி அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

உங்கள் அகத்தேயுள்ள இச்சாசக்தியே இறைவனது பிரதிபிம்பத்தின் கருவி. இச்சாசக்தியில் இருப்பது அவனுடைய வரம்பற்ற சக்தி, இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் கட்டுப்படுத்தும் சக்தி ஆகும். நீங்கள் அவனுடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் ஆசைப்படும் எதையும் கொண்டுவரும் அந்தச் சக்தி உங்களுடையதே.

நீங்கள் நல்ல விஷயங்களைச் செய்யத் தீர்மானிக்கும் போது, நீங்கள் பின்பற்ற ஆற்றல்மிக்க இச்சாசக்தியைப் பயன்படுத்தினால் நீங்கள் அவற்றைச் செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் முயற்சி செய்து கொண்டேயிருந்தால், எவற்றின் மூலம் உங்களுடைய இச்சாசக்தி அதன் முறையான வெகுமதியைக் காண்கிறதோ, அந்த வழிகளை இறைவன் உருவாக்குவான். “நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால்’,…இந்த மலையைப் பார்த்து, ‘கடலில் பெயர்ந்து விழு’ என்றாலும் அது அப்படியே நடக்கும்,” என்று இயேசு கூறிய போது அவர் குறிப்பிட்ட உண்மை இதுவே. நீங்கள் உங்களுடைய இச்சாசக்தியைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால், எந்தத் தோல்விகள் வந்தாலும் சரி, அது வெற்றியையும் உடல்நலத்தையும், மக்களுக்கு உதவும் சக்தியையும் உருவாக்கும், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அது இறைவனுடனான கூட்டுறவை உருவாக்கும்.
நிலையற்ற மனிதனின் மூளை “முடியாதது”களால் நிறைந்தது. குறிப்பிட்ட பண்புகளும் பழக்கங்களும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்துள்ளதால், தன்னால் சில விஷயங்களைச் செய்ய முடியாது; தன்னால் அதிக அளவு நடக்க முடியாது, தன்னால் இதை உண்ண முடியாது, தன்னால் அதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று எண்ணும்படியாக அவன் இவைகளால் பாதிக்கப்படுகிறான். அந்த “முடியாததுகள்” எரிக்கப்பட வேண்டும். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் நிறைவேற்றும் சக்தியை உங்களிடத்தில் நீங்கள் பெற்றுள்ளீர்கள்; அச்சக்தி இச்சாசக்தியில் இருக்கிறது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை ஆற்றல்மிக்க இச்சாசக்தியால் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது இறுதியாக ஒரு புலனாகும் புற வடிவத்தை எடுக்கிறது.
ஓர் எண்ணத்தை ஆற்றல்மிக்க இச்சாசக்தியால் எடுத்துச் செல்வது என்றால் அந்த எண்ண உருப்படிவம் இயங்கும் ஆற்றலாக வளரும் வரை அதைப் பிடித்துக் கொண்டிருப்பது என்று பொருள்படும். ஓர் எண்ணம் இச்சாசக்தியின் ஆற்றலால் இயக்க நிலைக்கு மாற்றப்பட்டால், அதனால் நீங்கள் உருவாக்கியிருக்கும் திட்ட வரைபடத்தின் படி உருப்பெற்று வெளிப்பட முடியும்.
உங்களால் எப்படி இச்சாசக்தியை வளர்க்க முடியும்? உங்களால் சாதிக்க முடியாது என்று நீங்கள் எண்ணும் ஏதேனும் ஒரு செயல்நோக்கத்தைத் தேர்ந்தெடுங்கள், மற்றும் பின்னர் அந்த ஒரு விஷயத்தைச் செய்ய உங்களுடைய எல்லா வலிமையுடனும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெற்றியைப் பெற்றுவிட்ட பிறகு, ஏதேனும் பெரிய விஷயத்திற்குச் செல்லுங்கள் மற்றும் உங்களுடைய இச்சாசக்தியை இந்த வழியில் தொடர்ந்து நடைமுறைப் படுத்துங்கள். உங்களுடைய பிரச்சனை மிகப் பெரியதாக இருந்தால், ஆழ்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்: “எம்பெருமானே, என் எல்லாப் பிரச்சனைகளையும் வெல்லும் சக்தியை எனக்கு அளிப்பாய்.” நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்களுடைய இச்சாசக்தியைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் மனத்தில் தீர்மானம் செய்ய வேண்டும். தொழில், தியானம் ஆகிய இரண்டிலும் இந்த இச்சாசக்தியைப் பயன்படுத்துங்கள்.
வெற்றியோ அல்லது தோல்வியோ, அது உங்கள் மனத்தில் தீர்மானிக்கப்படுகிறது. சமூகத்தில் ஏனையோரின் எதிர்நிலையான கருத்திற்கு எதிராகவும் கூட, உங்களுடைய எல்லாம்-வெல்லும் இறைவனால்-வழங்கப்பட்ட இச்சாசக்தியால் பிரச்சனைகளுக்கு நடுவில் துன்புறும் படி நீங்கள் கைவிடப்பட மாட்டீர்கள் என்ற திடநம்பிக்கையை நீங்கள் கொண்டு வந்தால், நீங்கள் ஓர் இரகசிய தெய்வீக சக்தி உங்கள் மீது வருவதை உணர்வீர்கள் மற்றும் அந்தத் திடநம்பிக்கையின் மற்றும் சக்தியின் காந்த சக்தி உங்களுக்காக புதிய வழிகளைத் திறப்பதை நீங்கள் காண்பீர்கள்.

தோல்வியை ஆக்கப்பூர்வமாக கையாளுதல்

Waterfall depicting how to move through rocks of difficulties and overcome failures.தோல்விக்காலமே வெற்றியின் விதைகளை விதைக்கும் மிகச்சிறந்த நேரம். சூழ்நிலைகள் எனும் சம்மட்டி உங்களைக் காயப்படுத்தக் கூடும், ஆனால் உங்கள் தலையை நிமிர்த்தி வைத்திருங்கள். நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்தாலும் சரி, எப்போதும் மற்றுமொரு முறை முயற்சி செய்யுங்கள். உங்களால் இனிமேலும் போராட முடியாது என்று நீங்கள் எண்ணும் போதோ அல்லது உங்களால் முடிந்த அளவிற்கு நீங்கள் செய்து விட்டீர்கள் என்று நீங்கள் எண்ணும் போதோ போராடுங்கள், அல்லது உங்களுடைய முயற்சிகள் வெற்றியால் முடிசூட்டப்படும் வரை போராடுங்கள்.

வெற்றியின் உளவியலைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். சிலர், “தோல்வியைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள்,” என்று ஆலோசனை கூறுவர். ஆனால் அது மட்டுமே உதவாது. முதலில், உங்களுடைய தோல்வியையும் அதன் காரணங்களையும் ஆய்வு செய்யுங்கள், அனுபவத்திலிருந்து பயனடையுங்கள், மற்றும் அதன்பின் அதைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் நிராகரித்து விடுங்கள். அவர் பலமுறை தோல்வியடைந்தாலும் கூட, தொடர்ந்து கடுமுயற்சி செய்து கொண்டிருப்பவர், அகத்தே தோல்வியடையாமல் இருப்பவர் உண்மையில் ஒரு வெற்றிகரமான நபர் ஆவார்.

வாழ்க்கை இருண்டதாக இருக்கக்கூடும், இடர்ப்பாடுகள் வரக்கூடும், வாய்ப்புகள் பயன்படுத்தப்படாமல் கைநழுவக்கூடும், ஆனால் ஒருபோதும் உங்களுக்குள், “எனக்கு எல்லாம் முடிந்து விட்டது, இறைவன் என்னைக் கைவிட்டு விட்டான்,” என்று கூறாதீர்கள். யாரால் அந்த வகையான நபருக்கு எதையேனும் செய்ய முடியும்? உங்கள் குடும்பம் உங்களைக் கைவிடலாம்; நற்பேறுகள் உங்களை விட்டுச் செல்வதாகத் தோன்றலாம்; மனிதனின் மற்றும் இயற்கையின் எல்லா ஆற்றல்களும் உங்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கலாம்; ஆனால் உங்கள் அகத்தேயுள்ள தெய்வீக முனைப்பால் உங்களுடைய கடந்தகாலத் தவறான செயல்களால் உருவாக்கப்பட்ட ஊழ்வினையின் ஒவ்வொரு படையெடுப்பையும் உங்களால் முறியடித்து விண்ணுலகத்தினுள் வெற்றி வாகை சூடியவராக முன்னேற முடியும்.

நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்தாலும் சரி, தொடர்ந்து முயற்சி செய்த வண்ணம் இருங்கள். என்ன நடந்தாலும் சரி, “பூமி தகர்க்கப்படலாம், ஆனால் நான் என்னால் முடிந்த மிகச்சிறந்ததை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்,” என்று நீங்கள் மாறாதபடி தீர்மானித்திருந்தால், நீங்கள் ஆற்றல்மிக்க இச்சாசக்தியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள், மற்றும் நீங்கள் வெற்றியடைவீர்கள். அந்த ஆற்றல்மிக்க இச்சாசக்தியே ஒரு மனிதனைச் செல்வந்தனாகவும் மற்றொரு மனிதனை வலிமையானவனாகவும் வேறொரு மனிதனை ஒரு மகானாகவும் ஆக்குகிறது.

ஒருமுகப்பாடு—வெற்றிக்கு ஒரு திறவுகோல்

வாழ்வில் பல தோல்விகளின் முக்கியக் காரணம் ஒருமுகப்பாட்டுக் குறைபாடு ஆகும். கவனம் ஒரு தேடும் சுற்றொளியைப் போன்றது; அதன் ஒளிக்கற்றை ஒரு விரிந்த பகுதியின் மீது பரவும் போது, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது குவிக்கும் அதன் சக்தி பலவீனமடைகிறது, ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பொருளின் மீது குவிக்கப்பட்டால், அது சக்திவாய்ந்ததாக ஆகிறது. பெரிய மனிதர்கள் ஒருமுகப்பாட்டு மனிதர்கள் ஆவர். அவர்கள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தின் மீது தமது முழு மனத்தையும் வைக்கின்றனர்.

ஒருவர் ஒருமுகப்பாட்டு அறிவியல் வழிமுறையை (யோகதா சத்சங்கப் பாடங்களில் கற்பிக்கப்பட்ட வழிமுறை) அறிந்திருக்க வேண்டும்; அதன்மூலம் அவர் தன் கவனத்தைத் திசைதிருப்பும் பொருட்களிலிருந்து விலக்கி ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தின் மீது குவிக்கலாம். ஒருமுகப்பாட்டுச் சக்தியின் மூலம், மனிதனால் தான் விரும்புவதை நிறைவேற்றும் மனத்தின் சொல்லொணாச் சக்தியைப் பயன்படுத்த முடியும், மற்றும் அவனால் தோல்வி நுழையக் கூடிய எல்லா வாயில்களையும் காவல் காக்க முடியும்.

நாம் நமது அருகாமையில் உள்ள பிரச்சனையை அல்லது கடமையை ஒருமுகப்பட்ட சக்தியுடன் அணுகி, அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இது நம் வாழ்வின் தத்துவமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலானோர் எல்லாவற்றையும் அரை-மனதுடன் செய்கின்றனர். அவர்கள் தமது கவனத்தின் சுமார் பத்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் அவர்களிடம் வெற்றிக்கான சக்தி இருப்பதில்லை….எல்லாவற்றையும் கவனச் சக்தியுடன் செய்யுங்கள். அந்தச் சக்தியின் முழு ஆற்றலும் தியானத்தின் வாயிலாக அடையப்பட முடியும். நீங்கள் இறைவனின் அந்தக் குவிக்கும் சக்தியைப் பயன்படுத்தும் போது, அதை உங்களால் எதன்மீதும் வைத்து ஒரு வெற்றியைப் பெற முடியும்.

படைப்பாற்றல்

உங்களைப் பரம்பொருளின் படைப்புச் சக்தியுடன் சுருதி சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு வழிகாட்டி எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல முடிவற்ற பேரறிவுத்திறனுடன் நீங்கள் தொடர்பில் இருப்பீர்கள். உங்கள் இருப்பின் ஆற்றல்மிக்க பேராதாரத்திலிருந்து சக்தி இடைவிடாது பாயும்; அதனால் உங்களால் எந்தச் செயற்பாட்டுத் தளத்திலும் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற முடியும்.
இந்தக் கேள்வியை உங்களிடமே கேளுங்கள்: “ஒருவருமே செய்திருக்காத எதையேனும் செய்ய நான் எப்போதாவது முயற்சி செய்திருக்கிறேனா?” அதுவே செயல்முனைப்பின் பயன்பாட்டில் ஆரம்பப் புள்ளி. நீங்கள் அத்தனை தூரம் சிந்தித்திருக்கவில்லை என்றால், நீங்கள் தாம் செய்வதை விட வித்தியாசமாகச் செய்வதற்கான சக்தி தம்மிடம் இல்லை என்று பிழையாகச் சிந்திக்கும் மற்ற நூற்றுக்கணக்கானோரைப் போன்றவர்கள். அவர்கள் தூக்கத்தில் நடப்பவர்களைப் போன்றவர்கள்; அவர்களுடைய ஆழ்மனத்திலிருந்து வரும் ஆலோசனைகள் அவர்களுக்கு ஒரு-குதிரை சக்தியின் உணர்வுநிலையைக் கொடுத்திருக்கிறது.
நீங்கள் இந்தத் தூக்கத்தில் நடக்கும் நிலையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் இந்தச் சங்கல்பத்தைச் செய்வதன் மூலம் உங்களை நீங்கள் எழுப்ப வேண்டும்: “என்னிடம் மனிதனின் மிகப்பெரிய பண்பு உள்ளது—செயல்முனைப்பு. ஒவ்வொரு மனிதனிடமும், எந்தச் சக்தியால் இதுவரை உருவாக்கப்பட்டிருக்காத ஏதேனும் ஒன்றை அவனால் உருவாக்க முடிகின்றதோ, அச்சக்தியின் சிறிதளவு பொறி இருக்கிறது. இருப்பினும் நான் சூழ்நிலையால் எனக்கு மனோவசியம் செய்யப்படுவதை அனுமதித்தால், நான் எவ்வளவு எளிதாக உலகை ஊடுறிவியிருக்கும் வரம்பு எனும் அழியும் உணர்வுநிலையால் ஏமாற்றப்பட முடியும் என்று நான் காண்கிறேன்!
செயல்முனைப்பு என்றால் என்ன? அது உங்களுக்குள் இருக்கும் ஒரு படைப்புத்திறன், முடிவிலாப் பெரும் படைப்பாளியின் ஒரு பொறி. அது வேறு எவரும் எப்போதும் உருவாக்கியிருக்காத ஏதேனும் ஒன்றை உருவாக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கக்கூடும். அது விஷயங்களைப் புதிய வழிகளில் செய்யும்படி உங்களைத் தூண்டுகிறது. செயல்முனைப்பு கொண்ட ஒரு நபரின் சாதனைகள் ஒரு எரிநட்சத்திரத்தைப் போல அத்துணை பிரமிக்கத்தக்கதாக இருக்கலாம். தோற்றத்தில் சூனியத்திலிருந்து ஏதேனும் ஒன்றை உருவாக்கியவாறு, சாத்தியமில்லை என்று தோன்றுவதை, பரம்பொருளின் மிகப்பெரிய கண்டுபிடிப்புச் சக்தியை ஒருவர் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியம் ஆகக்கூடும் என்று மெய்ப்பித்துக் காட்டுகிறார்.
படைக்கும் ஒருவர் சூழ்நிலைகள் மீதும் ஊழ்வினைகள் மீதும் தெய்வங்கள் மீதும் பழிசுமத்தியவாறு, வாய்ப்பிற்காகக் காத்திருக்க மாட்டார். அவர் வாய்ப்புகளைக் கைப்பற்றுகிறார் அல்லது அவற்றைத் தனது இச்சாசக்தி, முயற்சி, மற்றும் தேடும் பகுத்தறிவு எனும் மந்திரக் கோலால் உருவாக்குகிறார்.
முக்கியமான பணிகளைத் தொடங்கும் முன் அமைதியாக அமருங்கள், உங்கள் புலன்களையும் சிந்தனைகளையும் அமைதிப்படுத்தி ஆழ்ந்து தியானம் செய்யுங்கள். அப்போது நீங்கள் பரம்பொருளின் மாபெரும் படைப்புச் சக்தியால் வழிகாட்டப்படுவீர்கள்.
நீங்கள் ஏதேனும் ஒன்றை உருவாக்க விரும்புப் போதெல்லாம், புற ஆதாரத்தைச் சார்ந்து இராதீர்கள்; ஆழ்ந்து சென்று முடிவிலாப் பேராதாரத்தை நாடுங்கள். வெற்றியின் எல்லா வழிமுறைகளும், எல்லாக் கண்டுபிடிப்புகளும், இசையின் எல்லா அதிர்வுகளும், எல்லா உத்வேகமூட்டும் சிந்தனைகள் மற்றும் எழுத்துகள் ஆகியவையும் இறைவனின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பன்முக வெற்றியை உருவாக்குதல்

இறைவனை நாடுபவன் எவனோ, அவனே அதி புத்திசாலி. இறைவனைக் கண்டு கொண்டவன் எவனோ, அவனே மிகவும் வெற்றிகரமானவன்.

Water fountain depicting success.

மகா ஆசான்கள் நீங்கள் அலட்சியமாக இருக்கும்படி ஒருபோதும் ஆலோசனை கூற மாட்டார்கள்; நீங்கள் சமநிலையாக இருக்கும் படி அவர்கள் கற்பிப்பார்கள். உங்கள் உடலுக்கு உணவளிக்கவும் உடை அணிவிக்கவும், ஐயமின்றி, நீங்கள் வேலை செய்தாக வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு கடமை மற்றொன்றை முரண்படுத்த அனுமதித்தால், அது உண்மையான கடமை இல்லை. ஆயிரக்கணக்கான வணிகர்கள் தாம் நிறைய இதய நோயையும் கூட உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறக்கும் அளவிற்கு செல்வவளத்தைச் சேகரிப்பதில் அத்துணை மும்முரமாக இருக்கின்றனரே! வளத்திற்கான கடமை உடல்நலத்திற்கான கடமையை மறக்கச் செய்தால், அது கடமை அல்ல. ஒரு வேர்க்கடலை அளவிற்கு மூளை இருக்கும் பட்சத்தில், ஓர் அற்புதமான உடலை வளர்க்கச் சிறப்பான கவனத்தை வழங்குவதில் மட்டும் ஒரு பயனும் இல்லை. மனமும் மேம்படுத்தப்பட வேண்டும். ஒருவர் ஓர் இணக்கமான வழியில் வளர்ச்சியடைய வேண்டும். மேலும் உங்களிடம் மிகச்சிறந்த உடல்நலமும் செல்வவளமும் அறிவுத்திறனும் இருந்து, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையெனில், பின் நீங்கள் இன்னும் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. உங்களால், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மற்றும் என் மகிழ்ச்சியை ஒருவராலும் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது,” என்று உண்மையாகவே கூற முடிந்தால், நீங்கள் ஒரு மன்னன்—நீங்கள் உங்கள் அகத்தே இறைவனின் பிரதிபிம்பத்தைக் கண்டுவிட்டீர்கள்.

வெற்றியின் மற்றொரு தகுதி, நாங்கள் எங்களுக்கு மட்டுமே இணக்கமான மற்றும் பயனுள்ள முடிவுகளைக் கொண்டு வருவதில்லை, ஆனால் அந்தப் பலன்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதாகும்.

வாழ்க்கை முக்கியமாக சேவையாக இருக்க வேண்டும். அந்த இலட்சியமின்றி, இறைவன் உங்களுக்கு அளித்துள்ள அறிவுத்திறன் அதன் இலக்கை நோக்கிச் சென்றடைவதில்லை. சேவையின் போது, நீங்கள் சிறிய சுயத்தை மறக்கிறீர்கள், நீங்கள் பரம்பொருளின் பெரும் சுயத்தை உணருகிறீர்கள். சூரியனின் உயிரூட்டமிக்க கதிர்கள் எல்லாவற்றிற்கும் ஊட்டமளிப்பதைப் போல, நீங்களும் ஏழைகளின் மற்றும் கைவிடப்பட்டோரின் இதயங்களில் நம்பிக்கை எனும் கதிர்களைப் பரவச் செய்ய வேண்டும், மனம் நொந்த இதயங்களில் துணிவைத் தூண்டிவிட வேண்டும், மற்றும் தாம் தோல்வியாளர்கள் என்று எண்ணுவோரின் இதயங்களில் ஒரு புதிய வலிமையை ஒளியேற்ற வேண்டும். வாழ்க்கை ஒரு ஆனந்தமான கடமைப் போர்க்களம் மற்றும் அதேநேரம் அது ஒரு கடந்து போகும் கனவு என்று நீங்கள் உணர்ந்தறியும் போது, மற்றும் மற்றவர்களுக்கு இரக்கத்தையும் அமைதியையும் வழங்குவதன் மூலம் அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் ஆனந்தத்தால் நீங்கள் நிறைந்திருக்கும் போது, இறைவனின் கண்களுக்கு உங்களுடைய வாழ்க்கை ஒரு வெற்றிகரமானது ஆகும்.

மிகுதியும் வளமும்

Abundance of flowers.

தமக்கு மட்டுமே வளத்தை நாடுவோர் முடிவில் ஏழையாக ஆவது, அல்லது மன இசைவின்மையால் துன்புறுவது நிச்சயம்; ஆனால் முழு உலகையும் தன் வீடாகக் கருதுவோர், மற்றும் குழு அல்லது உலக வளத்திற்காக மெய்யாகவே அக்கறை கொண்டு உழைப்போர்…சட்டப்படியாகத் தமக்கே உரிய தனிநபர் சார்ந்த வளத்தைக் காண்கின்றனர். இது ஒரு நிச்சயமான மற்றும் இரகசியமான விதிமுறை ஆகும்.

ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு உதவ நல்லது எதையாவது, அது ஒரு அற்பமான அளவாக இருந்தாலும் கூட, செய்யுங்கள். நீங்கள் இறைவனை நேசிக்க விரும்பினால், நீங்கள் மக்களை நேசிக்க வேண்டும். அவர்கள் அவனுடைய குழந்தைகள். நீங்கள் பொருள்ரீதியாக தேவைப்படுவோருக்கு வழங்குவதன் மூலம்; மற்றும் மனரீதியாக துன்புறுவோருக்கு வசதியையும், அச்சமுள்ளோருக்கு தைரியத்தையும், பலவீனமானவர்களுக்கு தெய்வீக நட்பையும் தார்மீக ஆதரவையும் வழங்குவதன் மூலம் உங்களால் உதவிகரமாக இருக்க முடியும். நீங்கள் மற்றவர்களுக்கு இறைவனில் ஆர்வம் வரச் செய்யும் போது, மற்றும் அவர்களில் இறைவனுக்கான மிகப்பெரிய அன்பை, அவனில் ஆழ்ந்த நம்பிக்கையைப் பேணி வளர்க்கும் போது, நீங்கள் நன்மையின் விதைகளை விதைக்கவும் செய்கிறீர்கள்.

நீங்கள் இவ்வுலகை விட்டுச் செல்லும் போது, பொருள்சார்ந்த செல்வங்கள் பின்னால் விட்டுச் செல்லப்படும்; ஆனால் நீங்கள் செய்திருக்கும் ஒவ்வொரு நல்லதும் உங்களுடன் செல்லும். கஞ்சத்தனத்தில் வாழும் செல்வந்தர்கள், மற்றும் மற்றவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்யாத சுயநல மக்கள், அடுத்த பிறவியில் செல்வ வளத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் கொடுத்துப் பகிருவோர், அவர்களிடம் இருப்பது அதிகமோ அல்லது குறைவோ, வளத்தை ஈர்ப்பார்கள். அதுவே இறைவனின் விதிமுறை.

தெய்வீகப் பெருவளத்தை ஒரு மிகுதியான புதுப்பிக்கும் மழையாக எண்ணிக் கொள்ளுங்கள்; உங்கள் கைகளில் இருக்கும் பாத்திரத்திற்கேற்ப அதைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு தகரக் குவளையை ஏந்தினால், நீங்கள் அந்த அளவே பெறுவீர்கள். நீங்கள் ஒரு கிண்ணத்தை ஏந்தினால், அது நிரப்பப்படும். எவ்வகையான பாத்திரத்தை நீங்கள் ஏந்திக் கொண்டிருக்கிறீர்கள்? ஒருவேளை உங்கள் பாத்திரம் குறைபாடுள்ளதாக இருக்கலாம்; அப்படியானால், அது அச்சம், வெறுப்பு, ஐயம், பொறாமை ஆகியவற்றை முழு அளவில் வீசி எறிவதன் மூலம் பழுதுபார்க்கப்பட வேண்டும், அதன்பின் அமைதி, அமரிக்கை, பக்தி, மற்றும் அன்பு எனும் தூய்மையாக்கும் நீரால் கழுவிச் சுத்தம் செய்யப்பட வேண்டும். தெய்வீகப் பெருவளம் சேவை, பெருந்தன்மை ஆகியவற்றின் விதிமுறையைப் பின்பற்றுகிறது. கொடுத்துப் பின் பெறுங்கள். உங்களிடம் உள்ள மிகச் சிறந்ததை உலகிற்குக் கொடுங்கள் மற்றும் மிகச் சிறந்தது உங்களிடம் திரும்பிவரும்.

வெற்றிக்கான சங்கல்பங்கள்

சங்கல்பக் கோட்பாடும் அறிவுறுத்தல்களும்

நான் விரும்புவதை நான் விரும்பும் நேரத்தில் கொண்டுவர நான் முழுநிறைவான நம்பிக்கையில் சர்வவியாபக நன்மையின் சக்தியில் முன்னேறிச் செல்வேன்.

என்னகத்தே இருப்பது முடிவில்லாப் படைப்புச் சக்தி. நான் சில சாதனைகளைச் செய்யாமல் கல்லறைக்குச் செல்ல மாட்டேன். நான் ஒரு இறை-மனிதன், ஒரு பகுத்தறிவுப் படைப்பு. நான் பரம்பொருளின் சக்தி, என் ஆன்மாவின் ஆற்றல்மிக்கப் பேராதாரம். நான் வெளிப்பாடுகளை வணிக உலகில், சிந்தனை உலகில், ஞான உலகில் உருவாக்குவேன். நானும் என் தெய்வத்தந்தையும் ஒன்றே. என் படைப்புத்திறன்மிக்க தெய்வத்தந்தையைப் போலவே என்னால் நான் ஆசைப்படும் எதையும் படைக்க முடியும்.

தெய்வீகப் பெருவளத்திற்கான சங்கல்பங்கள்

தெய்வத்தந்தையே, நான் வளம், உடல்நலம், ஞானம் ஆகியவற்றை அளவில்லாமல் வேண்டுகிறேன், பூமியின் ஆதாரங்களிலிருந்து அல்ல, ஆனால் உன்னுடைய எல்லாம்-கொண்டிருக்கும், எல்லாம்-வல்ல, எல்லாம்-மிகையான கரங்களிலிருந்து வேண்டுகிறேன். நான் உன் குழந்தை, மற்றும் அதன் காரணமாக நான் வரம்புகளின்றி, உன் எல்லையற்ற செல்வங்களின் ஒரு தெய்வீகக் குழந்தையின் பங்கைக் கோருகிறேன்.
தெய்வத்தந்தையே, இது என் பிரார்த்தனை: நான் எதை நிரந்தரமாக வைத்திருக்கிறேன் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் எனக்குத் தினமும் தேவைப்படும் எதையும் விருப்பப்படி அடையும் சக்தியை எனக்கு அளிப்பாயாக.

மேலும் படிப்பதற்கு

இதைப் பகிர

Facebook
X
WhatsApp