கிரியா யோகம் உங்களுடைய மூளை உயிரணுக்களை மாற்றுகிறது

(பரமஹம்ஸ யோகானந்தரின் உரையாடல் மற்றும் கட்டுரைகளில் இருந்து)

உங்களுடைய கெட்ட பழக்கங்களே உங்களுடைய மிகப்பெரிய எதிரிகள். நீங்கள் அவற்றை வெல்லும் வரை அவை ஒரு பிறவியிலிருந்து இன்னொன்றுக்கு உங்களைப் பின்தொடரும். விதியிலிருந்து உங்களை விடுவிக்கும் பொருட்டு, கெட்ட பழக்கங்களிலிருந்து உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி? நல்ல தோழமை சிறந்த மருந்துகளில் ஒன்றாகும். உங்களிடம் மது அருந்தும் போக்கு இருந்தால், மது அருந்தாதவர்களுடன் பழகுங்கள். நீங்கள் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஆக்கப்பூர்வமான மனங்கள் கொண்ட, நோயைப் பற்றிச் சிந்திக்காத, மக்களுடன் இருங்கள். உங்களிடம் தோல்வி உணர்வுநிலை இருந்தால், வெற்றி உணர்வுநிலை உள்ளவர்களுடன் இணைந்திருங்கள். பின்னர் நீங்கள் மாறத் தொடங்குவீர்கள்.

உங்களது ஒவ்வொரு பழக்கமும் மூளையில் ஒரு குறிப்பிட்ட “பள்ளத்தை” அல்லது பாதையை உருவாக்குகிறது. இந்தப் படிவங்கள் உங்களை ஒரு குறிப்பிட்ட வழியில், பெரும்பாலும் உங்கள் விருப்பத்திற்கு எதிராக, நடந்து கொள்ள வைக்கிறது. மூளையில் நீங்களே உருவாக்கியிருக்கும் அந்தப் பள்ளங்களை உங்கள் வாழ்க்கை பின்பற்றுகிறது. அந்த வகையில் நீங்கள் ஒரு சுதந்திரமான நபர் அல்ல; நீங்கள் உருவாக்கிய பழக்கங்களுக்கு ஏறத்தாழ நீங்கள் ஒரு பலிகடா. அந்தப் படிவங்கள் எந்த அளவிற்கு இறுகிப் போயிருக்கின்றன என்பதைப் பொறுத்து, அந்த அளவிற்கு நீங்கள் ஒரு கைப்பாவையாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த கெட்ட பழக்கங்களின் கட்டளைகளை உங்களால் மட்டுப்படுத்த முடியும். எப்படி? அவற்றுக்கு எதிரான நல்ல பழக்கங்களின் மூளைப் படிவங்களை உருவாக்குவதன் மூலம். மேலும் தியானத்தின் மூலம் உங்களால் கெட்ட பழக்கங்களின் பள்ளங்களை முற்றிலும் அழித்துவிட முடியும். வேறெந்த வழியும் இல்லை. இருப்பினும், நல்ல தோழமை மற்றும் நல்ல சூழல் இல்லாமல் உங்களால் நல்ல பழக்கங்களை வளர்க்க முடியாது. நல்ல தோழமை மற்றும் தியானம் இல்லாமல் நீங்கள் கெட்ட பழக்கங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முடியாது.

பாரா ஆபரணம்

Photo depicting effect of meditation on brain of a human being.ஒவ்வொரு முறையும் நீங்கள் இறைவன் மீது ஆழமாக தியானம் செய்யும் போது, உங்கள் மூளையின் படிவங்களில் நன்மை பயக்கும் மாற்றங்கள் நிகழ்கின்றன. நீங்கள் நிதிசார்ந்த தோல்வியாளராக அல்லது தார்மீகம்சார்ந்த தோல்வியாளராக அல்லது ஆன்மீகம்சார்ந்த தோல்வியாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். “நானும் என் தெய்வத்தந்தையும் ஒன்றே” என்று சங்கல்பம் செய்தவாறு, ஆழ்ந்த தியானத்தின் வாயிலாக நீங்கள் இறைவனின் குழந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த இலட்சியத்தை விடாது பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிகுந்த ஆனந்தத்தை உணரும் வரை தியானம் செய்யுங்கள். ஆனந்தம் உங்கள் இதயத்தைத் தாக்கும் போது, இறைவன் உங்கள் ஒலிபரப்புக்கு பதிலளித்திருக்கிறான்; அவன் உங்கள் பிரார்த்தனைக்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கிறான். இது ஒரு தனித்துவமான மற்றும் உறுதியான முறையாகும்:

ஒரு பெரிய அமைதியையும் அதன்பின் உங்கள் இதயத்தில் ஒரு பெரிய ஆனந்தத்தையும் உணர முயற்சி செய்தவாறு, முதலில், “நானும் என் தெய்வத்தந்தையும் ஒன்றே” என்ற எண்ணத்தின் மீது தியானம் செய்யுங்கள். அந்த ஆனந்தம் வரும்போது, கூறுங்கள், “தெய்வத்தந்தையே, நீ என்னுடன் இருக்கிறாய். தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் கடந்தகால விதைப் போக்குகளின் மூளை உயிரணுக்களைச் சுட்டுப் பொசுக்கும்படி எனக்குள் இருக்கும் உன் சக்திக்கு நான் ஆணையிடுகிறேன்.” தியானத்தில் இறைவனின் சக்தி அதைச் செய்யும். நீங்கள் ஒரு ஆண் அல்லது பெண் என்ற வரையறைப்படுத்தும் உணர்வுநிலையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இறைவனின் குழந்தை என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிறகு மனரீதியாக சங்கல்பம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்: “என் மூளை உயிரணுக்களுக்கு மாறும்படி, என்னை ஒரு கைப்பாவையாக ஆக்கிய கெட்ட பழக்கங்களின் பள்ளங்களை அழித்துவிடும்படி ஆணையிடுகிறேன். இறைவா, உன் தெய்வீக ஒளியில் அவற்றை எரித்து விடுங்கள். தியானத்தின் ஆன்ம-அனுபூதி உத்திகளை, குறிப்பாக கிரியா யோகத்தை நீங்கள் பயிற்சி செய்யும்போது, இறைவனின் ஒளி உங்களுக்கு ஞானஸ்நானம் செய்விப்பதை நீங்கள் உண்மையாகக் காண்பீர்கள்.

பாரா ஆபரணம்

இந்த உத்தியின் செயல்திறன் பற்றிய ஒரு உண்மையான கதையை நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்தியாவில், கெட்ட சுபாவம் கொண்ட ஒருவர் என்னிடம் வந்தார். அவர் பொறுமை இழந்தபோது தனது மேலாளர்களைக் கைநீட்டி அடிப்பதில் நிபுணராக இருந்தார், எனவே அவரும் ஒன்றன் பின் ஒன்றாக வேலையை இழந்தார். அவர் கட்டுக்கடங்காமல் கோபப்படுவார், தனக்குத் தொந்தரவு செய்தவர் யாராக இருந்தாலும் கையில் கிடைத்த எதையும் அவர் மீது வீசுவார். அவர் என்னிடம் உதவி கேட்டார். நான் அவரிடம், “அடுத்த முறை நீங்கள் கோபப்படும்போது, நீங்கள் செயல்படுவதற்கு முன் நூறு வரை எண்ணுங்கள்.” அவர் அதை முயற்சித்தார், ஆனால் என்னிடம் திரும்பி வந்து, “நான் அதைச் செய்யும்போது எனக்கு அதிகக் கோபம் வருகிறது. நான் எண்ணும்போது, இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற கோபத்தால் நான் குருடனாகிறேன். அவரது நிலை நம்பிக்கையற்றதாகத் தோன்றியது.

நான் அவரிடம் இந்தக் கூடுதலான அறிவுறுத்தலுடன் கிரியா யோகத்தைப் பயிற்சி செய்யச் சொன்னேன்: “நீங்கள் கிரியாவைப் பயிற்சி செய்த பிறகு, தெய்வீக ஒளி உங்கள் மூளைக்குள் சென்று, அதற்கு இதமளித்து, உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி, உங்கள் உணர்ச்சிகளை அமைதிப்படுத்தி, அனைத்துக் கோபத்தையும் துடைத்துவிடுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். மற்றும் ஒரு நாள் உங்களுடைய கட்டுக்கடங்கா கோபங்கள் சென்றுவிடும்.” அதன்பின் சில நாட்கள் கழித்து, அவர் மீண்டும் என்னிடம் வந்தார், இந்த முறை அவர் கூறினார், “நான் கோபப்படும் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டேன். நான் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.”

நான் அவரைச் சோதிக்க முடிவு செய்தேன். அவருடன் சண்டையிட சில சிறுவர்களுக்கு ஏற்பாடு செய்தேன். அவர் வழக்கமாகக் கடந்து செல்லும் வழியிலுள்ள பூங்காவில் நான் அவரைக் கவனிக்க முடிகின்ற இடத்தில் ஒளிந்துகொண்டேன். சிறுவர்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் சண்டையிட முயன்றனர், ஆனால் அவர் மறுமொழியளிக்கவில்லை. அவர் அமைதி காத்தார்

இதைப் பகிர

Facebook
X
WhatsApp