பரமஹம்ஸ யோகானந்தரின் த ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பிரஷன் ஆப் ப்ரண்ட்ஷிப் என்ற இப்புத்தகம் மற்றவர்களுடனான நமது உறவுகளில் கண்டறியக் காத்திருக்கும் ஆழ்ந்த ஆன்மீக ஆழங்களை வெளிப்படுத்துகிறது. இப்புத்தகம் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்திய யோகதா சத்சங்க சொஸைடி / செல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் முதல்வரும் ஆன்மீகத் தலைவருமான சுவாமி சிதானந்த கிரி, டிசம்பர் 25 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள SRF சர்வதேச தலைமையகத்தில் நடைபெற்ற சன்னியாசிகளின் வருடாந்திர கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின்போது, த ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பிரஷன் ஆஃப் ப்ரண்ட்ஷிப் என்ற புத்தகத்தை உலகம் முழுவதும் விநியோகிக்க அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அந்தச் சிறப்பு நிகழ்வில், நேரில் கூடியிருந்த மற்றும் இணையவழியில் இணைந்திருந்த YSS/SRF சன்னியாசிகளிடம் பேசிய சுவாமி சிதானந்தஜி, இந்தப் புத்தகத்தில் பரமஹம்ஸர் வழங்கியுள்ள உத்வேகத்தின் செழுமையைப் பற்றி எடுத்துரைக்கையில். ‘இது ஒரு சிறிய புத்தகம்தான், ஆனால் குருதேவரின் உயிரோட்டத்தையும் உணர்வுநிலையையும் கொண்ட எந்த ஒன்றைப் போலவும், இதிலும் ஏராளமான விஷயங்கள் பொதிந்துள்ளன,’ என்று குறிப்பிட்டார்.
இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது; இது சாங்ஸ் ஆஃப் தி சோல் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பரமஹம்ஸஜியின் அழகான கவிதையான, நட்பு என்ற கவிதையுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, நட்பின் தெய்வீகத் தன்மை மற்றும் ஆன்மீக ஆற்றல் குறித்த உள்ளார்ந்த, எழுச்சியூட்டும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இறுதிப் பகுதி, “லவ் ஈஸ் த ப்ரத் ஆஃப் ஸ்பிரிட்” என்ற கவிதைவடிவிலான உத்வேகத்தை வழங்குகிறது; இதில் பரமஹம்ஸஜி, “அனைத்துப் படைப்பின் ஊடாகப் பாய்ந்து வியாபித்திருக்கும் தெய்வீக அன்பைப் பற்றிய தனது அனுபூதி மற்றும் அனுபவத்திலிருந்து பேசுகிறார்” என்று சுவாமி சிதானந்தஜி விளக்கியுள்ளார்.
YSS/SRF தலைவர், இந்தப் புத்தகத்தின் தலைப்பிற்கு ஆதாரமாக விளங்கும் அந்த உன்னதமான கட்டுரையின் தோற்றம் மற்றும் படிப்படியான வளர்ச்சி குறித்தும் விளக்கினார்; இதுவே இப்புத்தகத்தின் பெரும் பகுதியாக அமைந்துள்ளது. முதலில் 1930-களில் பரமஹம்ஸஜி-யாலேயே எழுதப்பட்ட இது, ஆரம்பகால YSS/SRF பாடங்களின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. 2019-இல் பாடங்களின் புதிய முழுமையான பதிப்புத் தயாரிக்கப்பட்டபோது, முன்னாள் தலைவர்களான ஸ்ரீ தயா மாதா மற்றும் ஸ்ரீ மிருணாளினி மாதா ஆகியோர் ஒரு முடிவெடுத்தனர். ஆன்மீக நட்பு குறித்த இந்த உலகளாவிய செய்தி, பொதுமக்களால் அணுக முடியாத ரகசியமான வீட்டுப் பாடத் தொடரில் மட்டுமே இருந்துவிடக் கூடாது என்றும், இது மனிதகுலத்திற்கு அதிகபட்சமாகச் சென்றடைவதை உறுதி செய்ய ஒரு புத்தகமாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானித்தனர். மேலும், 1949-ஆம் ஆண்டில் பரமஹம்ஸஜி இந்தக் கட்டுரையை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, இதுவரை வெளியிடப்படாத பல கூடுதல் விளக்கங்களையும் தெளிவுரைகளையும் சேர்த்திருந்ததாக சுவாமி சிதானந்தஜி குறிப்பிட்டார். எனவே, இந்தப் புதிய புத்தகத்தின் மூலம், “ஆன்மீக நட்பு மற்றும் தெய்வீக நட்பு குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் உன்னதமான கட்டுரையின் ஒரு தீர்க்கமான வடிவம்” இப்போது உலகிற்கு கிடைத்துள்ளது என்று சுவாமி சிதானந்தஜி கூறினார்.
வாசகர்கள் இந்தப் புத்தகத்தின் மூன்றாவது பகுதியில், ஒவ்வொரு பத்தியிலும் உள்ள ஆழமான ஆன்மீக உருவகங்களுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்த விளக்கப்படங்களை காண்பார்கள். இந்த உன்னதமான படைப்பை 2000-ஆம் ஆண்டில் யோகதா சத்சங்க சஞ்சிகைக்காக ஸ்ரீ தயா மாதா மற்றும் ஸ்ரீ மிருணாளினி மாதா தயாரித்தபோதே, இதனை ஒரு நிரந்தரப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுடன் இத்தகைய விளக்கப்படங்களையும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
சுவாமி சிதானந்தஜி தனது உரையை நிறைவு செய்யும் போது, மவுண்ட் வாஷிங்டனில் உள்ள SRF சர்வதேச தலைமையகம் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், இந்தப் புத்தகம் வெளியிடப்படுவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். “தெய்வீக நட்பு” என்ற கொள்கையே இந்த இடத்தில் பரமஹம்ஸஜியால் நிறுவப்பட்ட துறவிகள் சமூகத்தின் அர்ப்பணிப்புச் சேவையில் பின்னிப்பிணைந்திருக்கும் “ஊட்டமளிக்கும் தத்துவமாக” உள்ளது. மேலும், இந்தச் சிறப்பு மையத்திலிருந்து உலகெங்கும் பரவிவரும் அவரது உலகளாவிய பணிகளின் அடித்தளமாகவும் இதுவே திகழ்கிறது. “நீங்கள் அனைவரும் அன்பு, நல்லிணக்கம், கருணை மற்றும் பணிவுடன் இணைந்து செயல்பட்டால், இப்பணி உலகம் முழுவதும் பரவும்” என்று குருதேவர் கூறியுள்ளார்.
“உண்மையான நட்பை விட இந்த ஜட உலகில் கடவுளின் அன்பிற்கு வேறு தூய்மையான வெளிப்பாடு இல்லை என்று பரமஹம்ஸஜி அடிக்கடி குறிப்பிடுவார்,” என்று சுவாமி சிதானந்தஜி தான் கவனித்ததைக் கூறுகையில். “நட்பின் பண்பு மிக அழகாக இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகிற்கு இத்தகைய போதனைகள் மிகவும் தேவைப்படுகிறது, இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த அழகான நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நூலில் குருதேவர் கூறுகிறார்: ‘இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஏன் இவ்வளவு பரந்துள்ளனர்? ஏனென்றால் அவரும், பிற மகா அவதாரங்களைப் போலவே, மனிதகுலத்திற்கான சேவையில் சிறந்து விளங்கினார். நண்பர்களை ஈர்க்க, ஒருவர் உண்மையான நண்பனுக்குரிய குணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.’ குருதேவர் தனது இந்தச் சிறிய ஆனால் வலிமைமிக்க புத்தகத்தில் அந்தக் குணங்களை மிகவும் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.”
உண்மையான நட்பு: அனைவருக்கும் பொதுவான மற்றும் ஒன்றிணைக்கும் ஒரு பயிற்சி
அழகான விளக்கப்படங்களுடன் கூடிய இந்தப் புத்தகத்தில், யோகா மற்றும் ஆன்மீகத்தின் மிகவும் மதிக்கப்படும் நவீன குருமார்களில் ஒருவர், உண்மையான நட்பிற்கு அடிப்படையான உலகளாவிய பயிற்சிகளை கோடிட்டுக் காட்டுகிறார். இது சண்டை சச்சரவுகளால் பாதிக்கப்பட்ட மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு தீர்வை வழங்குகிறது. நட்பு, அதன் தூய்மையான மற்றும் உன்னதமான வடிவத்தில் பின்பற்றப்படும்போது, அது நம் சாதாரண அன்றாட உணர்வுநிலைக்கு அப்பால், அனைத்தையும் உள்ளடக்கிய விரிவடைந்த உணர்வுநிலைக்கு நம்மை கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை அவர் காட்டுகிறார். அந்த உணர்வுநிலையில், மற்றவர்களுடனும், இறுதியில் அனைத்து உயிர்களுடனும் ஒன்றிணைக்கும் தெய்வீக உறவை நாம் உணர்கிறோம். ஆன்மாவின் உண்மையான இயல்பான, அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் அந்த அன்பின் அனுபவத்தை நாம் பெறுகிறோம்.
தலைப்புகளின் அடக்கம்:
- நட்பின் கைவிடாத விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது
- முற்பிறவி நண்பர்களை அடையாளம் காணுதல்
- நாம் எங்கு சென்றாலும் உண்மையான நண்பர்களை ஈர்க்கும் காந்த சக்தியை வளர்த்துக் கொள்ளுதல்
- நம்மை நேசிக்காதவர்களையும் நேசிப்பதற்கு பயிற்சி செய்வது எப்படி
- …இன்னும் கூட!
உங்களது அன்பெனும் ஒளிவீசும் இராஜ்யத்தின் எல்லைகளைப் படிப்படியாக விரிவுபடுத்துங்கள். அதில் உங்கள் குடும்பம், அண்டை வீட்டார், சமூகம், நாடு, அனைத்து நாடுகள் என உணர்வுள்ள அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்குங்கள். இறைவனின் படைப்புகள் அனைத்தின் மீதும் கருணையும் பாசமும் கொண்ட ஒரு பேரண்ட நண்பனாக திகழுங்கள்; எங்கும் அன்பை விதைத்துக் கொண்டே இருங்கள்.
— “த ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பிரஷன் ஆஃப் ப்ரண்ட்ஷிப்” -ல் பரமஹம்ஸ யோகானந்தர்



















